Sunday, May 12, 2013

சில நேரங்களில் சில காதல்கள்


வழக்கமான அந்த காலை. வழக்கமான கூட்டத்தில் அவசர பயணங்கள். வியர்வையின் துளிகளை உதறிவிட்டு அந்த குளிரூட்டப்பட்ட ரயில் நிலையத்தைஅடைய பறக்கும் மனிதர்கள்.


பொழுது விடிவதை போல இவற்றில் எதுவுமே மாறவில்லை. மாற்றங்கள் நிகழவில்லை. மாற்றங்கள் நிகழ்த்துபவர்களை காணவில்லை. மாற்றங்களை எதிர்பார்த்து நித்தம் நித்தம் தோற்றுப்போகும் இதயங்கள். தொழிலின் காதலில் குடும்பத்தின் பொருளாதார நிலையின் முன்னேற்றதிற்காக  இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் மாற்றத்தை எதிர்பார்த்து தோற்றுக்கொண்டிருக்கின்றார்கள். 

ராமன் வெட்ஸ் ரம்யா. 

பளபளவென அந்த இருட்டை வெளிச்சமாக்கி கொண்டிருந்தது வரவேற்பில் இருந்த அந்த பலகை. வழக்கமான திருமண கூட்டத்தில் ரம்யா அழகாக தனியே தெரிந்தாள். எல்லோரும் அவரவர் காரியங்களில் ஆழ்ந்திருந்தனர். நானும் தெரிந்த முகங்கள் இருக்குமா என தேடிக் கொண்டிருந்தேன்.அதோ கல்லூரி கூட்டம் அங்கே தான் அமர்ந்திருக்கிறது.பல வருடங்களுக்கு பிறகு பார்த்து கொள்வதால் பணியை பற்றியே பேச்சுகள் இருந்தது.

அவ்வப்போது உனக்கெப்போ கல்யாணம் என்ற சம்பிரதாய கேள்விகள். சற்று எரிச்சலாகத்தான் இருந்தது. நல்ல வேளை என்னை யாரும் அப்படி கேட்கவில்லை. கேட்காதது நல்லதா கெட்டதா என்றும் தெரியவில்லை.

ரம்யா எங்களோடு கல்லூரியில் ஒன்றாக படித்தவள். பலரால் படிக்க முயற்சிக்கப்பட்டு யாருக்கும் புரியாமல் போனவள்.எனக்கும் தான். 

அழகென்றால் அப்படி ஒரு அழகு. திமிரில்லாத அழகு.
பெருமையாக நினைக்க வைக்காத அழகு.
அவள் கடந்து போகயில்  அனைத்து கண்களையும் ஈர்க்கும் அழகு.
எல்லா மலர்களின் மகரந்ததையும் வாசமாக கொண்டிருப்பாள்.
சிந்தித்து கொண்டிருக்கும் நெஞ்சங்கள் அனைத்தயும் நொடிப்பொழுதில் 
சிதைத்து விடும் அவல் சிரிப்பு.
அவள் கண்க்ள் கவிஞர்களின் கற்பனை வறட்சியை நொடி பொழுதில் தீர்த்து விடும்.
இத்தனை அழகையும் மொத்தமாக கொண்டாலும் அதை சற்று கூட சட்டை செய்யாமல் சகஜமாக பேசுவாள்.
அதனால் தான் என்னவோ எல்லோருக்கும் அவளை பிடிக்கும்.
அழகாக இல்லாமல் இருந்தால் பிடித்திருக்குமா என்று தெரியவில்லை.

ஆனால் நட்பு வட்டாரத்தில் ஒவ்வொருவராக அவளுடன் பேசுவதை நிறுத்திகொள்ளும் போது தான் புரிந்தது ஒவ்வொருவரும் முயன்று தோற்று கொண்டிருந்தார்கள் என்று. நானும் அவசரப்பட்டிருப்பேன். ஆனால் காதலில் கூட புத்திசாலித்தனம் வேண்டும் என காத்திருந்தேன்.

வட்டாரமும் ஒவ்வொன்றாக குறைந்து நாங்கள் இருவர் மட்டும் தான் கல்லூரியின் கடைசி வரை பேசிக்கொண்டிருந்தோம். சினிமா கிசிசுவில் தொடங்கி காலேஜ் கிசு கிசு வரை. தப்பி தவறி கூட காதல் எட்டிப்பார்த்து விடாமல் பார்த்து கொண்டேன்.அவளும் பேசவில்லை. ஒரு வேளை நான் பேச எதிர்பார்த்தாளோ என்னவோ. ஆனால் நான் அந்த விபரீத பரீட்சையை எடுக்க துணியவில்லை. நாட்கள் ஓடிக்கொண்டிருக்க காதலின் வீரியம் கூடிக்கொண்டே போனது. 

அதை மறைத்து மற்ற விஷயங்களை பேச மிகவும் சிரமப்பட்டேன்.காதலின் வலியை விட காதலோடு நட்பையும் இழக்கும் வலி மிக கொடுமை. கவனமாக இருந்தேன். நாங்கள் இருவரும் காதலிப்பதாக ஏறக்குறைய அனைவருமே பேசிக்கொண்டார்கள். ஆனால் அவள் சட்டை செய்யவில்லை. அழகான பெண்களுக்கு இது மிக சாதரணம். பள்ளியில் இருந்தே இந்த பேச்சுகள் பழகியிருக்கும். ஆனால் அந்த பேச்சுகள் எனது மனதின் வலியை குறைத்தது. என்றாவது அவளே இது பற்றி கேட்பாள், அப்போது ஜாடைமாடையாய் இதை உடைத்துவிடலாம் என காத்திருந்து ஏமாந்தேன்.

கல்லூரியும் முடிந்தது.பேச்சுக்கள் குறைந்து.அவ்வப்போது ஒரு மெசெஜ். எப்போதாவது ஒரு போன் கால். இப்படி பணியில் நேரத்தையும் கவனத்தையும் நிறையவே செலவிட்டு நட்பின்
விரிசலை அதிகப்படுத்தி கொண்டிருந்தோம்.

திடீரென்று ஒரு மெசெஜ். வெறும் குட் மார்னிங் தான். இருந்தாலும் அந்த நொடியில் பல எண்ணங்கள் தோன்றின.இந்த காலை நேரத்தில் எதற்கு என்னை பற்றி திடீரென்று நினைக்க வேண்டும். ரசாயன மாற்றங்கள் வேலையை காட்ட துவங்கின. பதிலுக்கு குட் மார்னிங் டார்லிங் என டைப் செய்ய மனது துடித்தாலும் டார்லிங் மறைந்து வெறும் குட் மார்னிங் மட்டும் விரல் டைப் செய்தது.நாங்கெல்லாம் ரொம்ப கவனம்ல என விரல் மார் தட்டியது.

இது பின்பு பல நாட்கள் தொடர்ந்தது. எங்கே மனதில் உள்ளதை சொல்லி விட்டால் தவறாக போய்விடுமோ என்ற பயமாக இருக்கலாம். இல்லை கௌரவ பிரச்சினையாக கூட
இருக்கலாம். ஆனால் இருவருமே அதை சொல்லி கொள்ளவில்லை.சில நாட்களில் மெசெஜ்கள் நின்று மெயில்கள் தொடங்கியது.

மெயில்கள் சில நாட்கள் தொடர்ந்தன. பல விஷயஙள் பேசி கொண்டிருந்தாலும் ஏதோ பெரிய விஷயத்தை துவங்க அடிக்கோடிடுவதை போலவே தோண்றியது.திடீரென்று ஒரு நாள் ஒரு புகைப்படம் அனுப்பினாள்.

இவனை தான் வீட்டில் பார்த்திருப்பதாக கூறினாள். நான் என்ன நினைக்கின்றேன் என தெரிய வேண்டுமென கூறினாள்.

மாப்பிள்ளை ஒகேவா என கேட்கிறாளா, இல்லை நானே உன்னை கல்யாணம் பண்ணிகிறேன், இவன வேண்டாம்னு சொல்லிடு என்ற பதிலை எதிர்பார்க்கிறாளா. மீண்டும் குழப்பம்.

நட்பை தொடர்வது என முடிவெடுத்தேன். அதனால் ஒரு வேளை காதல் இலவசமாக வருமென மனதின் ஒரம் ஆசை. 

மாப்பிள்ளை நல்லா தான் இருக்கார். பேசாம இவனையே கட்டிக்கோ என கூறினேன். அதில் இருந்த நகைச்சுவை எனக்கு மட்டும் தான் புரிந்தது என எனக்கு தாமதமாக தெரிந்தது.

ராமன் வெட்ஸ் ரம்யா. இதோ ரம்யாவின் கழுத்தில் தாலி கட்டப்படுகிறது.

சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது. தூரத்தில் பாடல் ஒலித்து கொண்டிருந்தது.

நான் பந்திக்கு செல்ல எழுந்தேன்.

Wednesday, July 18, 2012

விளையாக் கனவுகள்



சேவல்கள் ஒவ்வொன்றாக விழித்துக் கூவத் துவங்கிய நேரம்.

கதிரவன் கண்துடைத்து மலைகளின் மேல் எட்டிபார்க்க எத்தனிக்கும் அதிகாலை.

இயற்கையன்னையின் ஓரவஞ்சனையான அந்த கிராமத்து மண்வாசம் காற்றில் பரவிக்கொண்டிருந்தது.

அதிகாலை காற்றுக்கு அதனை மரங்களும் சோம்பல் நடனமாடிக்கொண்டிருந்தன.

பனை மரங்களில் சறுக்குவிளையாட்டுகள் நடந்து கொண்டிருந்தன. அதன் விளைவாக பதநீரும் கல்லும் தயாராகிகொண்டிருந்தன.

வாசலில் நீர் தெளிக்கும் சத்தங்கள். துடைப்பங்கள் ராகமாக ஒன்று கூடி கச்சேரி நடத்திக்கொண்டு வாசல்களை தூய்மைப்படுத்தி கொண்டிருந்தன.

இருள் வேண்டாவெறுப்பாக விலக துவங்கியிருந்தது.

கழுத்தில் மணியோடு மாடுகள் தொழிலுக்கு தயாராகி கொண்டிருந்தன. மணியின் சத்தங்கள் கேட்பதற்காகவே மாடுகள் குதித்து செல்வது போலிருந்தது. வாசலில் தெளிக்கப்பட்டிருக்கும் தன் சாணத்தை மிதிக்காமல் விலகி வயலுக்கு விரட்டப்பட்டு கொண்டிருந்தன.

ஊரணிக்கு பெண்கள் குடங்களோடு அணிவகுக்க துவங்கியிருந்தார்கள்.

களங்கமற்ற நெஞ்சங்கள் கள்ளமற்ற சிரிப்புகளோடு கலங்கலான தண்ணீரிலும் குடங்களை இருமுறை நீரின் மேலாக மூழ்க விட்டு எடுத்து தெளிந்த நீரை எடுத்து சென்றனர். நீரின் தூய்மை அங்கு மனதின் தூய்மையை பொறுத்திருந்தது. குடங்களை நிரப்பிக்கொண்டு மீண்டும் அணியாக திரும்ப துவங்கியிருந்தார்கள். அமைதியான அந்த நேரத்தில் அவர்கள் பேசும் ரகசியங்கள் அரைகுறையாக ஒவ்வொரு வீட்டைக்கடக்கும் போதும் ஒவ்வொரு வீட்டின் திண்ணையில் உறங்கிகொண்டிருப்பவருக்கும் ஒவ்வொன்றாக கேட்டது.
ஆனாலும் கவனிக்க தோன்றாத அந்த சாமத்தில் அவை வீணாகவே போயின.

ஒவ்வொருவராக அவரவர் வீட்டுக்கு திரும்பி குடத்தை இறக்கி பின் அன்றைய கலை கடமையாக இரவில் ஊற வாய்த்த சோற்றை எடுத்து நீராகாரம் செய்ய துவங்கினர்.

இத்தனையும் ஒரு சேர பார்க்கும், கேட்கும், நுகரும் அதனை பேருக்கும் அந்த விடியல் மகிழ்ச்சியாகத் தான் இருக்கும்.


மாறனும் அப்படி தான் விடியலை ருசித்தபடி உறங்கிக் கொண்டிருந்தான். அந்த கிராமத்து பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தான் . அடிப்படை வசதிகள் குறைவாக இருக்கும் அந்த பள்ளியில் நிரந்தரமாக எந்த வாத்தியாரும் இருந்ததில்லை. அதை பற்றியும் கல்வி பற்றியும் அங்கு யாரும் கவலைப்படவில்லை. கல்வியின் முக்கியத்துவத்தை மக்கள் உணராத அல்லது உணர்த்தப்படுத்தப்படாத காரணத்தால் இந்த நிலை. அதை உணர்ந்தவர்களும் வானம் பார்த்த பூமியை வானம் பொய்த்து விடுவதால் கண்டு கொள்வதில்லை.

ஆனாலும் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப யாரும் தவறவில்லை. காரணம் சத்துணவு திட்டம். அதனால் மதிய நேரத்தில் அங்கு அணைத்து மாணவர்களும் வந்துவிடுவார்கள். மற்ற பொழுதுகள் வேப்ப மரங்களிலோ, புளிய மரங்களிலோ, கண்மாய்களிலோ கழிக்கப்பட்டு கொண்டிருந்தன .

மாறனின் தந்தை கதிரேசன் விவசாயத்தை ஆதாரமாக கொண்டு வாழ்வை நடத்திக் கொண்டிருந்தார். அந்த கிராமத்தில் இருந்த ஒவ்வொரு குடும்பத்தையும் போல. மாறனை நன்றாக படிக்க வைக்கவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் நினைத்து போராடும் அவரின் எண்ணங்களுக்கு இயற்கை ஒத்துழைக்காததால் அதை செயலாக மாற்றமுடியாமல் தவித்து கொண்டிருந்தார். வயலை குத்தகைக்கு விட்டுவிட்டு டவுனுக்கு கட்டிட வேலைக்கு போகலாமென நீண்ட நாள் எண்ணம். ஆனால் பிறந்து கால் பதித்த மண்ணை மற்றவரிடம் குத்தகைக்கு விட மனது இடம் கொடுக்கவில்லை.

மாறனுக்கு இந்த உள்ள போராட்டத்தை புரிந்துகொள்ளும் வயது இல்லை. தவிர வகுப்புகள் தாண்டி கொண்டிருந்தாலும் கல்வியில் முன்னேற்றம் இல்லாத பக்குவங்கள் அவனுக்கு புரிய நியாமில்லை. காரணம் அந்த கிராமத்தின் அணைத்து பிள்ளைகளுமே அந்த பள்ளியில் தான் படித்துக்கொண்டிருந்தார்கள்.

தன் மகனும் தனக்கு பின்னே இதே வயலை நம்பி பிழைக்காமல் ஒரு அரசாங்க உத்தியோகத்தில் சேர வேண்டுமென்ற நியாமான ஆசைகளோடு தன் நாட்கள் கழிந்துக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தார் கதிரேசன். எப்படியாவது தன் மகனை அருகிலிருக்கும் டவுனில் தனியார் பள்ளியில் சேர்த்து விடவேண்டுமென்று எண்ணி கொண்டேயிருந்தார். ஒவ்வொரு முறையும் அடுத்த வருடம் சேர்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் வருடங்களில் இருந்த முன்னேற்றம் செயல்பாட்டில் இல்லை.

மாறன் பள்ளிக்கு செல்லுமுன் தினமும் கதிரேசனுக்கு கஞ்சிகலயத்தை கொண்டு செல்வது வழக்கம்.

"அப்பா, இந்தப்பா பிடி. அம்மா நீராகாரத்த குடிச்சிட்டு அப்புறம் வேல பாக்க சொன்னுச்சு. மதியம் சமைச்சு அதே கொண்டு வருதாம் "

"சரிப்பா ராசா. பள்ளிக்கூடம் எல்லாம் நல்ல படிக்கிறியா" கதிரேசன் மனதிற்குள் மகனின் ஆசைகளை சூதானமாக கேள்வி கேட்டு தெரிந்துக்கொள்ள நினைத்தார்.

"படிக்கறேன் பா. ஆனா வாத்தியார் தான் அடிக்கடி மட்டம் போட்டுடறார்"

"டவுன்ல இருக்க ஸ்கூல்ல சேத்துவிடவா பா" . அவன் சரி என
சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் உடனே தொற்றிக்கொண்டது.

"வேண்டாம்பா. இங்கனயே படிக்கறேன். இங்க மத்தியானம் சோறு
போடுவாங்க. அங்க அதுகூட போட மாட்டாங்களாமே" . யதார்த்தமான அந்த பதில் கதிரேசனை உலுக்கிபோட்டது.

எண்ணங்களின் வறுமையை போக்கினால் வாழ்வு நகராது. வாழ்வில் வறுமையை போக்கினால் தான் எண்ணங்கள் செயல்படும். வறுமையில் கல்வி பெருகாது. வயிறு பசித்திருக்கும் போது உணவு தான் பெரிதாய் தெரியும் கல்வி அல்ல. அத்தியாவசிய தேவையான மூன்று வேளை அல்ல ஒரு வேளையாவது நல்ல உணவு இருந்தால் தான் கல்வி கவனிக்கப்படும். இளமையில் வறுமையே கல்வியை எட்டாக்கனியாக்கி விட்டுகொண்டிருக்கிறது. மதிய உணவு திட்டத்தால் கல்வி பெருகியதோ இல்லையோ மக்கள் மனங்கள் நிறைந்திருகிறது. நிதர்சனங்கள் கதிரேசனுக்கு விளங்கிக்கொண்டிருந்தது.


"அது சரிதான்பா. எங்க படிச்சா என்ன நம்ம படிக்கிறத பொறுத்து தான் முன்னேற முடியும்" . கதிரேசனின் யதார்த்தமற்ற பதிலை மாறன் கவனிக்காமல் பள்ளிக்கு விரைந்துக்கொண்டிருந்தான்.

Friday, December 23, 2011

கனா காணும் கனவுகள்


அவளின் நம்பர் வாங்கி மொபைலில் ஸ்டோர் செய்து உறங்கியது தான் தெரியும். காலையில் வராத அந்த குட் மார்னிங் மெசேஜுக்கு டான் என எழுந்து மொபைல் பார்த்தேன்.சினிமா காதல்கள் சினிமா திருமணங்கள் நிஜ வாழ்வில் நடக்காதென உறைத்தது. ஆனால் மீண்டும் மனம் அந்த கனவுகளை காணாமல் போவதில்லை என்று தோன்றியது. சில யாதர்த்த எண்ணங்கள் கனவுகளோடு தான் இருக்கும் போல்.

முந்தைய இரவில் சேமித்த அந்த 20 டிராப்ட் மெசேஜ்களை அழித்துக்கொண்டே இன்று அவள் அனுப்புகிறாளோ இல்லையோ நான் கண்டிப்பாக அனுப்ப வேண்டுமென முடிவெடுத்தேன்.


வழக்கமான அந்த பொழுதில் வாழ்க்கையின் அவசியங்களுக்கு அவசரமாக பயணித்து கொண்டிருக்கும் மக்கள் வெள்ளத்திற்கு இடையில் சிக்கி கொண்டிருந்தாலும் நொடிக்கொரு
தடவை மொபைல் பார்க்க தவறவில்லை. மெசேஜ் அல்லது அழைப்பு வந்தால் என்ன செய்வது வராவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணங்கள் மட்டுமே மனதில்
ஓடி கொண்டிருந்தது .

நேற்று தான் அவள் அறிமுகமானாள் .

மன்னிக்கவும் .

அறிமுகபடுத்தபட்டாள் .

பார்த்த உடன் பிடித்து போகும் வசீகரம் நிறைந்திருந்தாள் .
பள்ளி. கல்லூரி. வேலை. இத்தனை கட்டத்தையும் கடந்து பெற்றோர் பார்க்கும் ஒருவனை பார்க்கும் அளவிற்கு அவள் வந்திருக்கிறாள் என்றால் நம்பமுடியவில்லை.

ஒரு வேலை காதல் தோல்வியாய் இருக்குமோ இல்லை பெற்றோர் வற்புறுத்தலால் வந்திருப்பாளோ. எண்ணமெல்லாம் எதிர்வாதம் போட்டுகொண்டிருக்க கண்கள் ஏனோ இவள் தான்
இனி என காட்டி கொடுத்து கொண்டிருந்தது. அது கவனிக்கபட்டும் கொண்டிருந்தது.

பட்டிகாட்டான் பார்த்த மிட்டாய் கடை போலில்லை, கடவுள் பார்த்த பக்தன் போல.

இந்த உலகில் இது வரை பூத்த பூத்திராத  பூக்களை விட அவள் அழகு.

நான் பார்த்த பார்த்திராத பூக்களையெல்லாம் விட அவள் அழகு.

நான் பிறந்த புண்ணியம் அவள் பிறந்த அன்றே பூர்த்தியானது.

அர்த்தமற்ற வாழ்வை ஒரு நொடி பொழுதில் அர்த்தமாக்கினாள்

கண்கள் பார்க்கும் காட்சிகள் அனைத்திலும் நிறைந்திருந்தாள்

இனி இவள் தான் என பார்த்த நொடியில் மனதின் அதனை குழப்பங்களுக்கும்
முடிவு கட்டினாள் .


பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தது. எனக்கோ ஒரிருவர்த்தை பேசினால் போதும் போல் இருந்தது அவளிடம். இத்தனை வருடம் உபயோகபடுத்தபடாத தைரியம் அனைத்தையும் வரவேற்று பெண்ணிடம் பேச வேண்டும் என்றேன். சலசலப்புகள் அமைதியாகி மீண்டும் சலசலப்புகள் துவங்கியது. சந்தேகத்துடன் அனுமதிக்கப்பட்டேன் .

என் கண்கள் அவளை பார்க்க அவள் கண்களோ தொலையாத ஒன்றின் தேடலில் ஈடுபட்டு கொண்டிருந்தன. என் கேள்விகள் அனைத்தும் மீண்டும் எழ, அவளிடம் பதில்கள் எழ சிரமப்பட்டன .

"பிடிச்சிருக்கா "

"எதா இருந்தாலும் வீட்ல பேசிக்கோங்க "

"நான் உன் வீட்டோட வாழ போறதில்ல. நீ சொல்லு "

"எனக்கு இப்படியெல்லாம் பேசத்தெரியாது . நீங்க வீட்லயே பேசிக்கோங்க "

"வீட்ல வற்புறுத்துறாங்களா ?"

"இல்ல "

"அப்ப பிடிச்சிருக்கா? "

" ......"

மனது லேசானது. சூழல் அவளை பேச விடாமல் தடுத்துகொண்டிருப்பது புரிந்தது. மீண்டும் தைரியத்தை வரவழைத்து கெஞ்சி கூத்தாடி நம்பர் பரிமாற்றம் நடந்தது .
நிச்சயம் அவளிடம் பேச வேண்டும். இவள் தான் இனி என முடிவெடுத்திருந்தாலும் பேசினால் நல்லது என உள்ளுணர்வு அடம்பிடித்து கொண்டிருந்தது.

நிகழ்காலம். அவளின் அழைப்பிற்காக காத்திருந்து காத்திருந்து காய்ந்து போனது தான் மிச்சம்.

மொபைலில் அத்தனை அவசரமாக மெசேஜ் டைப் செய்யும் விரல்களுக்கு அதை அனுப்ப மட்டும் தைரியமில்லாமல் அன்றைய பொழுதும் அர்த்தமில்லாமலே கழிந்தது. தலையணையும் மொபைலின் நெருக்கமும் கூடிகொண்டே போனது.

நாளைய பொழுது நல்லது நடக்கும் என அன்றும் நம்பிகையுடன் உறங்கினேன். கனவுகள் எல்லாம் அவள்.

விடிந்தது.

அன்றைய விடியல் விசேஷமானது. போன் எஸ்எம்எஸ் ஒலி அடித்தது . குட் மார்னிங். அவளின் மெசேஜ்.

அதை பார்க்கும் முன்னே அம்மாவின் அலறல் .

"டேய்! எழுந்திருடா. இன்னைக்கு பொண்ணு பாக்கபோணும்ல " .

Saturday, October 8, 2011

என் சாளரம் - 1

கனவுகள் இலவசம்
என் கனவுகளெல்லாம் அவள் வசம்.

ஒற்றை புன்னகையில் கற்றையாய்
என் உயிரை அள்ளி சென்றவள்.

நித்தம் நித்தம் என் கற்பனையில்
கருவாகி பிறப்பவள்.

தஞ்சமாக என் நெஞ்சில் புகுத்திட
நான் தேடும் பிஞ்சு நெஞ்சவள்.

என்னில் ஊற்றெடுக்கும் ஒவ்வோர்
வார்த்தைக்கும் அர்த்தமானவள்.

அழகுகளை படைக்க பிரம்மன்
படைத்த அளவுகோல் அவள்.

திமிரான அழகுகள் ஏராளம்
இவளோ அழகால் திமிறவைத்தவள்.

வாழ வெறுத்த அனைவருக்கும்
வாழ்க்கை பிடிக்கவைத்தவள்.

ஒரே பார்வையில் இதயத்தில்
ரத்த வறட்சியை உண்டுவிப்பவள்.

அறிவியல் மறந்த பல
ரசாயன மாற்றங்களை உருவிப்பவள்.


களவாட நினைக்கும் நேரம்
களவுகொடுப்பவளுக்கு தெரியாது .
காதலை தவிர.

கற்பனைகள் வறண்டு போகாது
நீ என் கண்முன்னே இருக்கும்வரை.

என்னவளாகாவிடினும்.